Sunday, 8 June 2025

வாரும் தூய ஆவியே...

*வாரும் தூய ஆவியே...* 


அன்பின் ஆவியே

அனலாய் வாருமே


ஆற்றலின் ஆவியே

ஆறுதலைத் தாருமே


இனிமையாம் ஆவியே

இல்லந்தனில் எம்முடன் தங்குமே


ஈர்ப்பின் ஆவியே

ஈகையின் வழி நடத்துமே


உண்மையின் ஆவியே

உகந்தோராய் எமை மாற்றுமே


ஊக்கமூட்டும் ஆவியே

ஊனியல்பைக்  கட்டுப்படுத்துமே


எழுச்சியின் ஆவியே

என்றும் உம் வழி நடத்திடுமே


ஏழையரின் ஆவியே

ஏற்றம் எமக்கருளுமே


ஐயம் தீர் ஆவியே

ஐம்புலன்களையும் காத்திடுமே 


ஒன்றிப்பின் ஆவியே

ஒற்றுமையில் வளர்த்திடுமே


ஓங்கு புகழ் ஆவியே

ஓய்வின்றி இரட்சித்திடுமே


அன்புடன்


கஸ்மீர் ரோச்,

9382709007

Sunday, 5 January 2025

மூவர் தந்த நான்காம் பரிசு*

 *மூவர் தந்த நான்காம் பரிசு


பொன்னுடன் பொன்னான நேரத்தை கொண்டு வந்தோரே


தங்கத்துடன் தங்க மனங்களை தர வந்தோரே


தூபத்துடன் தூய தாழ்ச்சியை

காணிக்கையளித்தோரே


தூப புகை போல தம்மை மறைத்து உயர்வடைந்தோரே


வெள்ளைப்போளம் போல வெண் மனங்கொண்டோரே


வெள்ளைப்போள பயன் போன்று தியாக நெஞ்சத்தினரே


உம்மைப் போல யாமும்


பொன்னான நேரத்தையும்,

தங்கமான காலத்தையும்,

தூபமான தியாகத்தையும்,

நறுமண உழைப்பையும்,

மாசற்ற நல்மனதையும்,

தூய்மை நல்லுரைகளையும்


நான்காம் பரிசாக இறைவனுக்களிக்க

துணையாகுமே...


 *நான்காம் பரிசு புத்தக சாராம்சம்*


அன்புடன்

கஸ்மீர் ரோச்

Monday, 27 May 2024

*தூயவரே.. எம் துணையாளரே...*

 *தூயவரே.. எம் துணையாளரே...* 


திருத்தைலத்தால் உமதாக்கியவரே
திரு அவையில் நிரந்தரமாக்கியவரே
திருந்தி வாழ இன்றே வந்திடுவீரே 
திருத்தைல ஆசீரில் மகிழ வைத்திடுவீரே

துணையாளரே தூயவரே
துன்புறும் யாம் வலுபெறவே
தூய மேகமாய் வருவீரே

நம்பிக்கையாளரே, நலமளிப்பவரே
நல்லன நிலைக்கவும்
நற்செயல் புரியவும்
நம்பிக்கை முத்திரையருள்வீரே 

நீங்கிடாதவரே, 
நீராய் நிலைப்பவரே
நீக்கமற ஊற்றுத் தண்ணீரால்
நீடிய நல்வாழ்வளித்திடுவீரே

மென்காற்றாய் எமை சூழ்பவரே
மெய்ப்பொருள் காணவும்
மெய்யங் கடவுளை மறவாதிடவும்
மெய்யறிவு நல்குபவரே

அனலாய் எமை காப்பவரே
அன்புத் தீயாய் அருகமர்பவரே
அத்தனை பேரிடர்களிலும்
அன்புறுவாய் எம் நடுவில் அமர்வீரே

கரங்கள் வழி ஆசீர்வதிப்பவரே
கயமைகளை சுட்டு தூய்மையாக்கிடுவீரே
கனிகளை கைக்கொள்ள காத்திடுவீரே
கர்த்தரின் கரத்தில் சேர்ப்பித்திடுவீரே

சாந்தப் புறா வடிவானவரே
சாந்தமல்லாதவற்றை புறந்தள்ளுபவரே
சாத்தானை வெறுக்க ஆற்றலானவரே
சாம்பலாம் எம் சோம்பல் அகற்றுபவரே

Saturday, 21 November 2020

உலக விதிகளை மீறிய மன்னர்*

 *உலக விதிகளை மீறிய மன்னர்* 


அரசு என்றால் மாளிகை உண்டு

நம் அரசர் பிறந்ததே ஏழ்மையில் தானே....

அரசு என்றால் ஆற்றல் உண்டு

நம் அரசர் ஆற்றலை துறந்தவர் தானே...

அரசு என்றால் படை பலம் உண்டு

நம் அரசர் ஏழைகளின் நண்பர் தானே...

அரசு என்றால் மகிமை உண்டு

நம் அரசர் மகிமையை மறைத்தவர் தானே...

அரசு என்றால் ஆட்சி உண்டு

நம் அரசர் இறையாட்சியை

உருவாக்கியவர் தானே...

அரசு என்றால் கிரீடம் உண்டு

நம் அரசர் நம் பாவ

முள் கிரீடம் அணிந்தவர்தானே....

மன்னர் என்றால் மார்புக்கவசம உண்டு

நம் அரசர் நமக்காக மார்பில் நொறுங்கியவர் தானே....

 *ஆனால்* 

மன்னர் என்றால் எல்லை உண்டு

நம் மன்னர் உலகுக்கே மன்னர்

மன்னர் என்றால் ஒரு பிரிவு மக்கள் உண்டு

நம் அரசருக்கு எல்லையில்லா  மக்கள்

மன்னர் என்றால் சாம்ராஜ்யம் உண்டு

நம் அரசருக்கு சகலமும் அவரின் அசைவில்....


அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா !

உம் அரசாட்சியின் உரிமை மக்களாய் எமை காத்திடுமே...

இறையாட்சியின் விழுமியங்களை நாளும் நிலைநிறுத்த துணையாடுமே....


அன்புடன்

கஸ்மீர் ரோச்

சின்னமலை

9382709007

Tuesday, 10 November 2020

உறுப்புகளில் சிறியதே....**

 *உறுப்புகளில் சிறியதே....** 

உறவுகளை நேசிப்பதும் நீயே....

உணர்வுகளை காயப்படுத்துவதும் நீயே...

சீர்திருத்த கருத்துகளையும் பகர்கிறாய்..

சீரழிக்கும் செயலையும் செய்கிறாய்..

உடலுக்கு உகந்தவையும்

சுவைக்கிறாய்...

உடலைக் கெடுப்பதையும் ருசிக்கிறாய்...

இறை வேண்டலில் ஆவியானவரை துதிக்கிறாய்...

இகழ்ந்து வசைச் சொல் சொல்லி வதைக்கிறாய்..

அதெப்படி....

ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நீரூற்றில் நல்லநீர் மட்டும் தானே வரும்....

மாறுபட்ட நீர் வராதே...

ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட விளக்குத்தண்டில் ஒளிமட்டும் தானே பிரகாசிக்கும்.....

இருளும் ஒளியும் ஒருசேர தோன்றுமா...

இதோ....


 *நன்நாக்கு அழியா

நம் நாயகன் தூய அந்தோனியாரைப் போன்று* 

நாவடக்கம் கொள்வோம்

நாவினால் அவர் பணிதொடர முயல்வோம்

நாவை தூய்மையாக்குவோம்

நாவினால் நல்லன மட்டுமே பகர்வோம்

நாவினை நாளும் நயமாக வைத்திருப்போம்.

அன்பின் இறைவா,

எம் நாவினை

வல்லமையுள்ள,

இனிமையுள்ள,

வலிமையுள்ள,

நாவாக மாற்றுமே! 

நல்லன சொல்லவும்,

நயம் பகரவும்


நாளும் நற்சொல் பகரவும் காத்திடுமே.


அன்புடன்,


கஸ்மீர் ரோச்


9382709007

Friday, 6 November 2020

 *எத்தனை அழகு** 

 *நம் கத்தோலிக்கம்* 



இறை வார்த்தையை மையப்படுத்தி படிப்பினை தருகின்றதே

இறையுண்மைகளை வகைவகையாக மனதில் பதியச் செய்கின்றதே

நம்பிக்கையும்,பாரம்பரியமும் ஒன்றிப்பின் நற்போதனைகளை வழங்கிடுதே

பாரம்பரியமும் புதியவையும் அழகுற வடிவமைக்கப்படுகிறதே

அன்னையை மையப்படுத்தி நம்  கத்தோலிக்கமே ஜொலிக்கிறதே

புனிதர்களின் ஒவ்வொரு வாழ்வும் படிப்பினையாக்கப்பட்டு உரமாக்கப்படுகிறதே

அருட்சாதனங்களால் வளமாகவே வாழ்வாகவே வகைப்படுத்துகிறதே

அன்பையும் மன்னிப்பையும் நாம் பற்றிக்கொள்ள தினமும் போராடுகிறதே...

நம் கத்தோலிக்கமே !

நம் உயிரே !

உன்னில் மகிழ்ந்து,

உன்னை மகிமைப்படுத்துவோமே ! !

அன்புடன்,

கஸ்மீர் ரோச்,

சின்னமலை

சென

Saturday, 3 December 2016

புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி

புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி
உலகமனைத்தையும் குப்பையெனக்
கருதி அதை உதறிய உத்தமரே
கால்கள் புண்ணாகிய போதும்
பொன்னான மறை போதித்த புண்ணியரே
மொழி அறியாமலும் திசை தெரியாமலும்
எம் முன்னோரை வசப்படுத்திய ஞான ஒளியே
சிலுவையே சீர்மகுடம் என அதை மட்டுமே
ஆயுதமாக்கி ஆன்மாக்களை வென்றவரே
இறை வார்த்தைக்கேடயமாக இறை நம்பிக்கை
வாழ்வாக வலம் வந்த வெற்றி வீரரே
இந்தியாவை நேசித்து இந்தியாவுக்காக
என்றும் பரிந்து பேசும் எம் தந்தையே
ஸ்பெயின் தேசத்தில்  அரச குடும்பத்தில்பிறந்து
இறை அன்பினால் ஏழையான எம்  முனிவரே
கோவாவிலும் தென்தமிழகத்திலும் போதித்து
மீனவரையும் மற்றவரையும் மனமாற்றிய தவமே
ஆசீரளித்த கரத்தையே சுயவிமர்சனம் எழுதி
அறிவிக்கச் செய்த அற்புதமானவரே
தவத்தின் வலிமையைக் கூட்ட தன்னையே
பலவீனமாக்கிய தன்னிகரில்லா தூயவரே
தொலைத்த சிலுவையை மீட்டுக் கரை சேர்த்த
கடல் வாழ் நண்டின் நல்ல நண்பரே
நூற்றாண்டாக நினைவில் கொள்ள எம்மோடு உறையும் இயேசுவின் நற்சீடரே
எங்கள் அண்ணல் பிரான்சிஸ் சவேரியாரே !
எங்கள் பாதுகாவலரே
எங்கள் வழிகாட்டியே
உம் பணியைத் தொடர்வோம் நன்றே ! !